சுதந்திர தினமும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாத்திரமும்.
பிரதேசம் சார்ந்த அல்லது இனம், கோத்திரம் சார்ந்த அடையாளங்களை இஸ்லாம் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. அவற்றை இயல்பானதாகவும் இறைவனின் ஏற்பாடாகவுமே இறை வெளிப்பாடு அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இந்த அடையானங்களின் மீதான தீவிர பற்றுறுதி பொதுவான மானிட சமத்துவத்தையும் நீதியையும் சிதைக்கக் கூடிய கருவியாக உருப்பெறும்போதுதான் அது கண்டிக்கத் தக்கதாக மாறுகிறது. இந்த வரையறைக்குள் நாட்டுப் பற்றையும் தேசிய அடையாளங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்துவது பொருத்தமானது. தேசத்தின் நலன், அல்லது இனத்தின் நலன் இயல்பானதாகவும்; பொதுவான மானிட விழுமியங்களோடு முரண்படாததாகவும் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அதிகார வர்க்கத்தின் கருவியாகவும் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதாகவும் மாறும்போதுதான் விமர்சனத்துக்கு உட்படுகிறது.