சுதந்திர தினமும் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பாத்திரமும்.
பிரதேசம் சார்ந்த அல்லது இனம், கோத்திரம் சார்ந்த அடையாளங்களை இஸ்லாம் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. அவற்றை இயல்பானதாகவும் இறைவனின் ஏற்பாடாகவுமே இறை வெளிப்பாடு அறிமுகப்படுத்துகிறது. ஆனால், இந்த அடையானங்களின் மீதான தீவிர பற்றுறுதி பொதுவான மானிட சமத்துவத்தையும் நீதியையும் சிதைக்கக் கூடிய கருவியாக உருப்பெறும்போதுதான் அது கண்டிக்கத் தக்கதாக மாறுகிறது. இந்த வரையறைக்குள் நாட்டுப் பற்றையும் தேசிய அடையாளங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்துவது பொருத்தமானது. தேசத்தின் நலன், அல்லது இனத்தின் நலன் இயல்பானதாகவும்; பொதுவான மானிட விழுமியங்களோடு முரண்படாததாகவும் இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அதிகார வர்க்கத்தின் கருவியாகவும் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதாகவும் மாறும்போதுதான் விமர்சனத்துக்கு உட்படுகிறது.
இதே நிலையில் 'நாட்டுப் பற்று' என்பது இயல்பான உணர்வாக வெளிப்பட வேண்டுமே தவிர இன்னுமொரு அழுத்தத்தின் எதிரொலியாக இருக்க முடியாது. முஸ்லிம் சமூகத்தின் அண்மைக்கால தேசிய தினக் கொண்டாட்டங்கள் இந்த அடிப்படையில்தான் விமர்சிக்கப்படுகின்றன. ஒழுக்க நடத்தைகள், பண்பாடு, நாட்டுப் பற்று போன்ற எந்த விடயமாயினும் அழுத்தங்களின் எதிரொலியாக வெளிப்படும்போது அவை இயல்பானவையாய் இருப்பதில்லை. மாறாக உறுதியற்றவையாகவும் பலவீனமானவையாகவுமே அமைகின்றன.
'நடுநிலையான சமூகம்' என அல்குர்ஆனால் வர்ணிக்கப்படும் முஸ்லிம் சமூகம், தான் எந்தச் சூழலில் வாழும்போதும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் 'பாரபட்சமற்ற நீதி' எனும் உயர்ந்த இலக்கினை தவறவிட முடியாது. இஸ்லாமிய மூலாதாரங்களும் இஸ்லாத்தின் எழுச்சிக் காலகட்ட வரலாறும் இதற்கான சாட்சியங்களாக இருக்கின்றன. மனித சமூகத்தின் மீதான அக்கறை, வியாபகப் பாங்குள்ள சமூக நீதி என்பவற்றை இந்த நாட்டிலும் வாழவைக்கக் கூடியவர்களாகவே இந்நாட்டு முஸ்லிம்கள் இருக்க வேண்டும். இந்த அடிப்படையின் மீதே முஸ்லிம்களின் தேசப் பற்றும் கட்டியெழுப்பப்பட வேண்டும். அடிபணிதலின் வெளிப்பாடாக அன்றி பாரபட்சமற்ற மனித சமூகத்தின் மீதான அக்கறையின் வெளிப்பாடாக தேச பக்தி உருப்பெறும்போது அது மெச்சத் தக்கதாகும்.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னோடி சிந்தனையாளர்கள் இந்தப் பாதையில்தான் நாட்டுக்கான தமது பங்களிப்பை நல்கியுள்ளார்கள் என்று எமக்குத் தோன்றுகிறது. பாரபட்சமற்ற சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம் போன்ற இஸ்லாம் கூறும் அடிப்படை மானிட விழுமியங்களை இந்த நாட்டில் வாழ வைக்கும் மிகப் பெரும் பொறுப்பை இந்நாட்டு முஸ்லிம் சமூகம் சுமந்திருக்கிறது. ஒரு முஸ்லிமின் நாட்டுக்கான பங்களிப்பு 'இமாறதுல் அர்ழ்' (பூமியை வளப்படுத்தல்) எனும் பெரும் பணியின் ஓர் அங்கமாக நோக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் வாழும் ஒரு முஸ்லிம், இந்த நாட்டு மக்களின் மீதும் வளங்களின் மீதும் உண்மையான அக்கறை கொண்டவனாகவும் சூற்றுச் சூழலின் மீது கரிசனையுள்ளவனாகவும் அவற்றின் மேம்பாட்டுக்கும் பாதுகாப்புக்காகவும் நேர்மையாக உழைக்கக்கூடியவனாகவும் இருக்க வேண்டும்.
'முன்மாதிரியான நடுநிலைச் சமூகம்' என்ற பாத்திரத்தை முஸ்லிம் சமூகம் ஏற்கும்போது மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும். குறுகிய இனத்துவ நலன்களின் பின்னால் அல்லது பிரதேச நலன்களின் பின்னால் அடிபட்டுச் செல்லும் சமூகமாக இருக்கும் வரை எம்மால் இவற்றை சாதிக்க முடியாது. எமது சமூக ஒழுங்கில் மேலோட்டமான மெருகூட்டலன்றி தீவிரமானதும் அறிவுப் பின்னணி கொண்டதுமான மறுசீரமைப்பே தேவைப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக