இலங்கையின் 68வது சுதந்திர தினமும் மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வாழ்வொழுங்கும்.
ஓவ்வொரு மனிதனும் சுதந்திர உணர்வுடன் பிறந்துள்ளான். நிர்ப்பந்தம், பலவீனம் என்பவற்றின் காரணமாகவே அவன் பிறருக்கு அடிமைப்படும் நிலை ஏற்படுகிறது. இருந்தபோதிலும், மனிதனின் இயல்பான சுதந்திர உணர்வு அனைத்து அடிமைத் தளைகளில் இருந்தும் விடுதலை பெறும் போராட்டத்தின்பால் அவனை உந்தித் தள்ளுகிறது. எமது தாய்நாடான இலங்கை காலணித்துவ அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை பெற்ற 68வது ஆண்டு நிறைவினை இன்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இனம், மதம் போன்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி, 'தேசம்' எனும் ஒற்றைக் கொடியின் கீழ் ஒன்றுபட்டு சிந்திக்கும் தருணமாக இன்றைய தினம் அடையாளப்படுத்தப்படுகிறது.
