திங்கள், 6 அக்டோபர், 2025

உலக ஆசிரியர் தினம் - நடைமுறைகளும் எதிர்பார்ப்புக்களும்


சர்வதேச தினங்கள் என்பவை, ஐக்கிய நாடுகள் சபை போன்ற, சர்வதேச அமைப்புகளால் உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை மையப்படுத்தவும் அறிவிக்கப்பட்ட சிறப்பு நாட்களாகும். இத்தினங்கள் ஆழமான சிந்தனைகள், கருத்தாடல்களை மையப்படுத்தியவை. ஆனால், பெரு வணிக நிறுவனங்கள் அவற்றுள் சிலவற்றை மேலோட்டமான களியாட்ட நிகழ்வுகளாகவும் கொண்டாட்டங்களாகவும் மாற்றி வைத்திருக்கின்றன. சர்வதேச ஆசிரியர் தினம்கூட இந்த வலைக்குள் சிக்கி, நுகர்வுக் கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத அம்சமாக மாறியுள்ளது. உண்மையில், உலக ஆசிரியர் தினம்  சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO), UNICEF, EI ஆகியவற்றின் கூட்டிணைவில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் வகிபாகத்தை கொண்டாடுவது மட்டுமன்றி  ஆசிரியர்கள் தமது தொழில் திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிக்காட்டுவதற்கு தேவைப்படும் ஆதரவு குறித்தும்,  உலகளாவிய ரீதியில் இத்தொழிலின் எதிர்காலப் பாதை குறித்தும் சிந்தித்துப் பார்ப்பதற்குமான ஒரு நாளாகவே இத்தினம் நினைவுகூரப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு குறிப்பிடுகிறது.