சனி, 26 அக்டோபர், 2013

நிகழ்வு: காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆக்கத்திறன் கண்காட்சி 2013

மட்/மம/காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் 2013ம் ஆண்டுக்கான ஆக்கத்திறன் கண்காட்சி 26-10-2013 (1434-துல்'ஹஜ்-20) காலை 09:00 மணிக்கு வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பெருமளவான ஆக்கங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இடைநிலை வகுப்பு மாணவர்கள் சிலரும் கண்காட்சி ஒழுங்கமைப்பில் உதவி புரிந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாடசாலை மட்டத்தில் நடைபெறும் இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் ஆக்கத் திறனை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கண்காட்சி சிறப்புற ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும், கண்காட்சிக்கான கால இடைவெளி மிகக் குறுகியதாக இருந்தது என்பது குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஓர் குறைபாடாகும். இத்தகைய தரமிக்க கண்காட்சியை ஒழுங்குசெய்த ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களும் பங்களிப்புச் செய்த மாணவர்களும் பெற்றோர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

திங்கள், 14 அக்டோபர், 2013

நிகழ்வு:- காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர் தின விழா

காங்கேயனோடை மட்/மம/அல்-அக்ஸா மகா வித்தியாலய ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வகையில் குறித்த பாடசாலையில் இருந்து 2011ம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின விழா 14-10-2013 அன்று காலை 10.00 மணியளவில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.அப்பாஸ் (நழீமி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் எம்.ஐ.அப்துல் கபூர் (மதனி), காத்தான்குடி போட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.சுபைர், காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலய அதிபர் ஜனாப் J.சித்திகீன், பாலமுனை அலிகார் வித்தியாலய அதிபர் ஜனாப் H.M.அப்துர் ரஸ்ஸாக், காங்கேயனோடை ஜாமிஉல் மஸ்ஜித் நிருவாக சபைத் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை (பஹ்ஜி) கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஏ.எம.முஜாகித் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

ஆசிரியம்- ஓர் ஆன்மீக மாற்றத்தின் தேவை

'என்னால் கூடிய தூரம் பார்க்க முடிகிறது என்றால், பல திறமைசாலிகளின் தோள்மீது நான் நின்று பார்த்ததுதான் காரணம்' என பிரபலமான பௌதீகவியல் விஞ்ஞானியான சேர் ஐசாக் நியூட்டன் கூறினார். ஒரு மனிதனின் முன்னேற்றத்திலும் சாதனைகளிலும் பல்வேறுபட்ட ஆற்றல் மிக்க மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

இந்த அடிப்படையில்தான் ஆசிரியப் பணியும் நோக்கப்பட வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் ஏணிக்கும் ஓடத்திற்கும் ஒப்பிடப்படும் வழமை இருக்கிறது.