ஆசிரியம்- ஓர் ஆன்மீக மாற்றத்தின் தேவை
'என்னால் கூடிய தூரம் பார்க்க முடிகிறது என்றால், பல திறமைசாலிகளின் தோள்மீது நான் நின்று பார்த்ததுதான் காரணம்' என பிரபலமான பௌதீகவியல் விஞ்ஞானியான சேர் ஐசாக் நியூட்டன் கூறினார். ஒரு மனிதனின் முன்னேற்றத்திலும் சாதனைகளிலும் பல்வேறுபட்ட ஆற்றல் மிக்க மனிதர்களின் பங்களிப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்த அடிப்படையில்தான் ஆசிரியப் பணியும் நோக்கப்பட வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் ஏணிக்கும் ஓடத்திற்கும் ஒப்பிடப்படும் வழமை இருக்கிறது.
உயரத்திற்கு செல்லவும் கரை சேரவும் வசதி செய்து கொடுப்பது ஆசிரியப் பணியின் முக்கிய இலட்சணமாகும். இதனால்தானோ என்னவோ நவீன ஆசிரிய வகிபாகம் 'வசதி செய்து கொடுப்பவர்' என அமைகிறது.
ஆசிரியப் பணி சமூகத்தில் முக்கியமான பணியாகவே கருதப்பட்டு வந்துள்ளது. தரமான கல்வியை வழங்குவதன்மூலம் தனிமனிதர்களையும் சமூகத்தையும் உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட வாழ்க்கையின்பால் நகர்த்திச் செல்லும் பாரிய பணியை ஆசிரியம் சுமந்துள்ளது. இதனால்தான் மனிதன் நாகரீகத்தை சுவைக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து வரலாற்று நெடுகிலும் பல்வேறு கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட மக்களாலும் ஆசிரியர்கள் போற்றுதலுக்குரியோராக மதிக்கப்பட்டு வந்துள்ளனர்.
பண்டைய கிரேக்க நாகரீகத்தில் வரலாற்று எச்சங்களை விட்டுச் சென்றோர் ஆசிரியர்களே. பைதகரஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டில் என இப்பரம்பரையானது நீண்டு செல்கிறது. தனித்துவமான அறிவுப் பாரம்பரியம் ஒன்றை உருவாக்கிய இவர்கள் தன்னைப் போன்ற சிந்தனையோட்டம் கொண்ட ஆசான்களின் பரம்பரையொன்றை உருவாக்கிவிடக்கூடிய உற்பத்தித் திறன் கொண்டோராகவும் இருந்தனர். இவர்கள் விதைத்துச் சென்ற அறிவுப் பொக்கிசங்களின் விளைச்சலை நவீன ஐரோப்பா இன்றும் அனுபவிக்கிறது.
பண்டைய இந்திய சமுதாயங்களில் ஆசிரியர்கள் மிக உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். மாதா, பிதா குரு, தெய்வம் எனப் போற்றுதலுக்குரியோரின் ஒழுங்கு தரப்படுகிறது. இங்கே ஒவ்வொரு படியிலி உள்ளோரும் அடுத்த படியில் உள்ளோரை அறிமுகம் செய்து வைப்பதாக விளக்கமளிக்கப்படுகிறது. இந்த ஒழுங்கில் கடவுளை அறிமுகம் செய்து வைக்கும் பணியினைப் புரியும் கடைசி வழிகாட்டியாக ஆசான் மதிக்கப்படுகிறார். சாதிய சமூக அமைப்பினை அடிப்படையாகக் கொண்டிருந்த இந்து சமூகங்களில் வேதங்களைக் கற்ற ஆசான்கள், அரசகுலத்தோரை விட உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்பட்டதோடு ஆட்சியாளர்களுக்கு அறிவுரை பகர்ந்து வழிநடத்தக்கூடிய வகையிலான உன்னதமான சமூகப் பாத்தி;ரத்தையும் வகித்தனர். இந்து சமயமும் கலாச்சாரமும் இன்றுவரை நிலைத்து நிற்பதற்கு வசிஷ;டர், துரோணர், விசுவாமித்திரர் போன்ற ஆற்றல் மிக்க ஆசான்களின் பணியே காரணம் என்ற கருத்தினை கவிஞர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள 'இந்து மதம்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
யூத, கிறிஸ்தவ சமூகங்களிலும் ஆசான்கள் மதிக்கப்பட்டனர். இறைவாக்கினர்களும் தீர்க்கதரிசிகளும் உன்னத ஆசிரியப் பணியினைப் புரிந்த மகான்களாவர். இறைவனால் வழிநடாத்தப்பட்ட இவர்கள், தம் சமூக மக்களினையும் அப்பாதையில் வழிநடாத்தப் பாடுபட்டனர. சமூகத்தின் தலைவர்களாகவும் இவர்களே இருந்தனர். 'நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான் ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமாகிய நான் உங்களின் கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவரின் காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டுள்ளீர்கள்' என இயேசு கிறிஸ்து கூறியதாக விவிலிய நூல் குறிப்பிடுகிறது (யோவான் 13:13-14). இங்கு ஆசிரியரின் சமூக அர்ப்பணிப்பு சுட்டிக் காட்டப்படுகிறது.
இஸ்லாம் ஆசிரியப் பணிக்கு வழங்கியுள்ள முக்கியத்துவம் கூர்ந்து கவனிக்கத்தக்கதாகும். ஏனெனில் அது இறைவன் ஆற்றிய பணியாக மதிக்கப்படுகிறது. 'ஓதுவீராக உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன் எழுதுகோலைக் கொண்டு மனிதனுக்குக் கற்றுக் கொடுத்தான். அன்றி மனிதன் அறியாதவைகளை எல்லாம் அவன் கற்றுக் கொடுத்தான்' (அல்குர்ஆன் 96:3-5) என அல்குர்ஆனின் ஆரம்பமாக அருளப்பட்ட வசனங்கள் இறைவனை அறிமுகம் செய்கின்றன. 'நான் நற்பண்புகளைக் கற்பிக்கக்கூடிய ஆசானாக அனுப்பப்பட்டுள்ளேன்' எனத் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை அந்த உன்னத பணியை ஆற்றிவிட்டே சென்றார்கள். நாகரீகமற்ற ஒரு சமூகத்தை நற்பண்புகளின் பால் வழிநடத்தி உலகுக்கு நாகரீகத்தைப் போதிக்கக்கூடிய சமூகமாக மாற்றிய உலகின் மிகச் சிறந்த ஆசானாக அவர்கள் இருக்கிறார்கள் என்றால், அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
இன்று ஆசிரியர்களின் வகிபாகம் மாற்றமடைந்துள்ளதாகக் கூறப்பட்டபோதிலும் ஆசிரியப் பணியின் உன்னதமான ஆன்மீக உள்ளடக்கமும் உயிரோட்டமும் என்றும் மாற்றமடைவதில்லை. பண்டைக்கால ஆசான்கள் மாணவர்களை வெறும் தகவல்களால் நிறைப்போராக இருக்கவில்லை மாறாக தனது மாணவர்களை உத்தமமான வாழ்க்கை ஒன்றுக்குத் தயார்படுத்தக்கூடியோராகவும் அதற்காக அவர்களின் ஆன்மாவைச் சீர்படுத்தக்கூடியோராகவும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணியினை அல்குர்ஆன் பின்வருமாறு வரையறுக்கிறது. '.....அவர்களுக்காக ஒரு தூதரை அவர்களில் இருந்தே எழுந்தருளச் செய்தான். அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி, வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். நிச்சயமாக அவர்கள் இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (அல்குர்ஆன் 3:164).
இன்றைய தொழிநுட்ப வளர்ச்சியால் தகவல்களை இயந்திரங்கள் கூட வழங்கிவிடுகின்றன. எனவே அத்தகைய இயந்திரத் தனமான ஆசிரியர்களின் தேவை தற்காலத்தில் அருகிவிட்டது என்றே கூறலாம். மாறாக தம் மாணாக்கரின் ஆத்மாவோடு பேசக்கூடிய, அவர்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடிய நல்லாசான்களே இன்றைய காலத்தின் தேவையாகும். ஆவர்களால் மட்டுமே உலகில் அமைதியை விதைக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக