திங்கள், 29 செப்டம்பர், 2014

நிகழ்வு:- காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலய சிறுவர் தினப் போட்டிகள்

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலான சிறுவர் தினப் போட்டி நிகழ்வுகள் இன்று காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன. இப்போட்டிகள் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றன. கட்டுரை, கவிதை, பேச்சு, சித்திரம், ஆக்கம் ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பெறுகின்ற மாணவர்களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி பாடசாலையில் நடைபெறவுள்ள சிறுவர் தின விழாவில் பரிசில்கள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திங்கள், 15 செப்டம்பர், 2014

சீமா- நீதி கோரும் கண்ணீர் ஓவியம்

மாலை நேரத்தில் திடீரெனப் பெய்த மழையின் அழகில் மெய் மறந்து துள்ளி விளையாடிக்கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. ஆனால், சற்று நேரத்துக்குள்ளால் அவளது மூச்சு அடங்கிப் போகிறது. சமூகச் சீரழிவின் இருண்ட கடதாசிகளில் அவளது வரலாறும் குறித்து வைக்கப்படுகிறது. ஊருக்குள் விட்டுவைக்கப்பட்ட மனித மிருகம் ஒன்று அந்த மழலை மலரைக் கசக்கிப் போட்டது.
பாத்திமா சீமா பாதுகாப்பற்ற ஒரு சமூகச் சூழலின் அடையாளச் சின்னமாய் மாறிப் போகிறாள். பேச முடியாமல் வாய் அடைக்கப்பட்ட நிலையில் மரணித்துப் போன அவள் நல்லோர்களின் உள்ளத்து உணர்வுகளாய் மாறி நியாயம் கேட்கிறாள். அவள் வேண்டுவதெல்லாம் 'என்னைக் கொன்ற மிருகத்தைக் கொன்று விடுங்கள்' என்பதுதான்.