ஞாயிறு, 31 ஜூலை, 2016


பாடசாலைகளில் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகளும் ஒழுக்க உருவாக்கமும்.

பாடசாலைகளில் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள் குறித்த எமது சிந்தனைகளில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லை. கடுமையான உடல் ரீதியான தண்டனைகளின் மூலம் ஒரு பிள்ளையில் ஒழுக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற கருத்திலிருந்து நாம் இன்னும் விடுபடத் தயாராக ' சகல வகையான இம்மைகள் புறக்கணிப்பிலிருந்தும் பாதுகாப்புப் பெறும் உரிமை பிள்ளைகளுக்கு உண்டு. பிள்ளைகளைத் துன்புறுத்த பெற்றோருக்கோ பிற பராமரிப்பாளர்களுக்கோ உரிமை இல்லை.இது தொடர்பான தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு அரசினுடையதாகும்.' ஏன ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமை சமவாயம்- உறுப்புரை 19 தெரிவிக்கின்றது. 

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் இலங்கை கைச்சாத்திட்டதிலிருந்து இலங்கையில் சிறுவர்களின் ஒழுக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயம் 1989ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இலங்கை 1991ம் ஆண்டு அதனை அங்கீகரிக்கிறது. ஐ.நா. சிறுவர் உரிமை சவயாத்தின் படி 18 வயதுக்குட்பட்டோரே சிறுவர்களாவர். இன்று இலங்கையில் வாழும் 43 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த சிறுவர் உரிமை சாசனத்தினால் ஆளப்பட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும், குறிப்பாக கல்வி கற்றவர்களாவது, உயர் ஒழுக்க சீலர்களாகவும் உத்தமர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால், உண்மை என்ன? ஊழல் மிக்கவர்களாகவும் சமுதாய சிந்தனையற்றவர்களாவும், தொழில் நேர்மையற்றவர்களாகவும் சட்ட வரம்புகளை சாதுரியமாக மீறக்கூடியவர்களாவும் சில் வேளைகளில் பண்பாடாகக்கூட பேசத் தெரியாதவர்களும் இருப்பது எதனால். உயர் கல்வித் தராதரம் கொண்டவர்கள்கூட இருப்பது எதனால். அவர்களுக்கு அவர்களது ஆசிரியர்களால் வழங்கப்பட்ட தண்டனைகள் எவ்வாறான ஒழுக்கத்தை ஏற்படுத்தின? மேற்குலக நாடுகளை ஒழுக்கமின்மையின் உறைவிடமாகக் கருதுகின்ற நாம் எமது கடற்கரைகளிலே பூங்காக்களிலோ வீதிகளிலோ வீசப்பட்டிருக்கும் குப்பைகளைப் பார்த்து எமது சமூகங்களின் ஒழுக்க மனப்பாங்கை மதிப்பீடு செய்ய முடியும். 

ஒழுக்கம் என்பது ஒரு கொள்கையாக உருவாக்கம் பெறவில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது! அச்சத்தின் காரணமாகவும் இயலாமையின் காரணமாகவும் அடங்கிப் போகின்ற ஒரு வகையான இயந்திரத் தனமான ஒழுக்கம்தான் எம் சமூகத்துள் பெரும்பாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது வசதியாக ஒழுக்கக் கட்டுப்பாடுகளை மீறும் நிலையில்தான் பெரும்பாலானோர் இருக்கின்றனர். ஒழுக்கத்தைத் தமது கொள்கையாகக் கொண்ட சிலர் எமது சமூகங்களில் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், கடுமையான உடல் தண்டனைகள்தான் அவர்களை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. 

இன்றைய நிலையிலும் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் ஒழிக்கப்படவேயில்லை. உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்படாத எந்தப் பாடசாலையும் இருப்பதாகக்கூட எமக்குத் தெரியவில்லை. பாடசாலையில் வழங்கப்படும் பெரும்பாலான உடல்ரீதியான தண்டனைகள் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவதில்லை. ஆனால், 'தண்டனை இல்லாமல்தான் மாணவர்களின் ஒழுக்கம் பாதிப்படைந்துள்தாக கருத்துக் கூறப்படுகிறது. இன்றைய சமூகச் சூழலின் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு சிறுவர்களைப் பயிற்றுவிக்கத் தவறிய நிலையில் 'தண்டனையின்மை' என்பது ஒரு காரணமாக முன்வைக்கப்படுகிறது . எத்தகைய விஞ்ஞான ரீதியான சமூகவியல் ஆய்வுப் பின்னணியும் கொண்ட கருத்தாக இது காணப்படவில்லை. 
பாடசாலைகளில் ஆசிரியர்களால் வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனைகள், மாணவர்களின் கற்கும் மனநிலையில் பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன. கடுமையான தண்டனைச் சூழல், தண்டனை பெறாத மாணவர்களின் மனநிலையையும் பாதிக்கிறது. கடுமையான தண்டனைகள் காரணமாக ஒழுக்கத்தைப் போன்றே கல்வியும் இயந்திரத் தனமானதாக மாற்றம் பெறுகிறது.
உண்மையான அன்பும் புரிந்துணர்வும் உணரப்படத்தக்க உயர் கௌரவமுமே கொள்கைப் பிடிப்புள்ள ஒழுக்கத்தைக் கட்டமைக்கும். அதற்கு கடுமையான உழைப்பும் நீண்டகாலப் பயிற்றுவிப்பும் பொறுமையும் தேவைப்படலாம். ஆசிரியர்கள் கண்டிப்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. உடல் ரீதியான தண்டனைகள் வழங்காத, மாணவர்களுடன் பண்பாடான மொழியில் உரையாடத் தெரிந்த, கண்டிப்பாக விதிகளை நடைமுறைப்படுத்தக்கூடிய பொறுப்புள்ள ஆசிரியர்கள் எமது சமூகத்துக்குள் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அவர்களை அவர்களது மாணவர்கள் எப்போதும் நினைவுகூர்வதையும் எமது அனுபவத்தில் காண முடிகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக