சனி, 13 மே, 2023

மட்/மம/அந்-நாஸர் வித்தியாலயத்தின் இன்றைய நிலையும் அதிபர் உரையும்

எமது சூழலில் பாடசாலை நிருவாகமானது, முழுமையான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வேண்டி நிற்கின்றது. பாடசாலை நிருவாகத்தின் முக்கிய அங்கம் என்ற வகையில், அதிபரின் வகிபங்கு பாடசாலையொன்றில் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்கினைக் கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. வளர்ச்சி கண்ட பல பாடசாலைகளின் வரலாற்றில் இவ்வுண்மை பொதிந்திருப்பதைக் காணலாம். இந்தவகையில், காத்தான்குடி மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலய அதிபரின் நேற்றைய (12.05.2023) உரையும் கரிசனைக்குரியது. அதிபர் பள்ளிவாயலில் உறுதிமொழி எடுத்ததும், தனது திட்டங்கள் தொடர்பாக வெளிப்படையாக பொதுவெளியில் முன்வைப்புச் செய்ததும் கவன ஈர்ப்பைப் பெறக்கத்தக்கன. தற்போதைய அதிபர், பாடசாலையை பழைய நிலைக்குக் கொண்டுவருவதில் உளர்ப்பூர்வமான ஆர்வத்துடன் இயங்குகிறார் என்பதையும் பாடசாலை நேரத்துக்கு அப்பால், களப் பணிகளில் ஈடுபடுகிறார் என்பதையும் அவரது உரையிலிருந்தே தெரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. மட்/மம/ அந்-நாஸர் மகா வித்தியாலயம், பன்முகப்பட்ட சிக்கற்தன்மை வாய்ந்த பிரச்சினைகளைப் பின்புலத்தில் கொண்ட ஒரு பாடசாலை.  காலஞ்சென்ற பிரபல சமூகவியல் துறைப் பேராசிரியரொருவரின் கூற்றொன்றை இங்கு ஞாபகப்படுத்த முடியும். "மாணவர்கள் நுண்ணறிவில் சமநிலையில் இருந்தாலும், சமூகத்திலுள்ள வகுப்பு வேறுபாடானது, தொடர்ந்தும் அடைவுமட்ட வேறுபாட்டில் செல்வாக்குச் செலுத்துவதாகவே உள்ளது" என்கிறார் பேராசிரியர் David E.Lavin. அதுபோல பிள்ளைகளின் ஆசிரியர் மீதான விருப்பம்கூட சமூக வர்க்க வேறுபாடுகளின் தாக்கத்தினைக் கொண்டிருக்கின்றன என்பதும் சில கல்வியியலாளர்களின் கருத்தாகும். இது குறித்ததான மாற்றுநிலைக் கருத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. மாணவர்களின் கல்வியில் சமூக வகுப்பு வேறுபாடுகளின் தாக்கத்தை இழிவளவாக்கும் நோக்கில்தான் இலங்கையில் இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், பிரபலமான பாடசாலைகளாக தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் சில அரச பாடசாலைகளின் நடவடிக்கைகள் இலவசக் கல்வியின் அறம்சார்ந்த நோக்கங்களை முற்றாக நலிவடையச் செய்வனவாகவும் அதற்கு எதிரானவையாகவும் உள்ளன. இந்தக் களத்தில்தான் "மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலயத்தில் அனுமதி பெறும் பெரும்பான்மையான மாணவர்கள், வறுமையான, கலவிப் பின்புலமும் போதியளவு கல்வி தொடர்பிலான விழிப்புணர்வுமற்ற குடும்பங்களைச் சேர்ந்தோராக இருக்கின்றனர்" என்ற விடயம் ஆராயப்பட வேண்டும். ஒரு பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் உபகலாசார வேறுபாடுகள் இருப்பது இயலபானது. ஆனால், இந்த வேறுபாடானது ஒரு பாடசாலையில், அதுவும் நகர்ப்புறச் சூழலில், கல்வி கற்றவர்கள் வாழ்கின்ற Catchment area வில் காணப்படும் ஒரு பாடசாலையில், ஏற்கனவே நல்ல அடைவுகளைத் தந்த ஒரு பாடசாலையில்,  சமநிலை குழம்பியதாகவும் முற்றிலும் எதிர்மறையானதாகவும் இருந்தால், அது விநோதமானதும் தீவிரமாக ஆராயப்பட வேண்டியதுமாகும். தனியே ஒருவரின் தவறாக இதனை சாராம்சப்படுத்துவது முற்றிலும் பாமரத்தனமானதாகும். முதலில் இந்த சமநிலையின்மையை மாற்றியமைப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலயத்தின் Catchment area விலுள்ள பிள்ளைகள், வேறு பாடசாலைகளில் முன்னணிப் பெறுபேறுகளைப் பெறக்கூடியவர்களாக உள்ளனர். பாடசாலை தொடர்பான சமூகத்தின் மனப்பாங்கும் ஆசிரியர்களின் மனப்பாங்கும் பிள்ளைகளின் மனப்பாங்கும் முதலில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.  ஆசிரியர்களும் பிரதிபலிப்பு சிந்தனையுள்ளவர்களாக செயற்படுவது முக்கியமானது.  வெறும் பரிசுகளும் தண்டனைகளும் இன்றைய சூழலில் வினைத்திறனானவையாக இருப்பதில்லை. "சமூக சமத்துவம், பரஸ்பர கண்ணியம் எனும் இயல்புகளையுடைய சனநாயக சமூகத்தில் வெகுமதி, தண்டனை என்பன தமது முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்து வருவதைக் காண முடிகிறது. இவைகளைப் பயன்படுத்தி மாணவர்களைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஆசிரியர்கள் பிரச்சினைகள் தீர்வதற்கு பதிலாக அவை மேலதிக பிரச்சினையைத் தோற்றுவிப்பதையே கண்டுள்ளனர்" என்கிறார், எமது நாட்டின் கல்வியியல் துறைப் பேராசான்களுள் ஒருவரான, கலாநிதி பக்கீர் ஜஃபார். எனவே, பொறுப்புணர்வும் பங்களிப்பு ஊக்கமுமுள்ள மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்றோரை ஒருங்கிணைப்பதனூடாக மட்டுமே பயன் காண முடியும். இந்த விடயத்தில் அதிபர் காத்திரமான நடவடிக்கைகளினை மேற்கொள்வார் என எதிர்பார்க்கிறோம்.  புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றுகள், அதிபரின் உரையில் தென்படுகின்றன. சமூகத்தின் மத்தியிலும் குறித்த உரை வரவேற்பைப் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது. மட்/மம/அந்-நாஸர் மகா வித்தியாலயத்தின் புதிய கடமை நிறைவேற்று அதிபர், ஜனாப் S.M.M. பஷீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரது தூய்மையான எத்தனங்கள் வெற்றி தரவேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்போம்.

-Mohamed Jahani Abdul Careem

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக