இலங்கையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, முறைசார் கல்வியின் அடிப்படைத் தகைமை ஒன்றினை வழங்கக்கூடிய, முக்கிய பொதுப் பரீட்சையாக நோக்கப்படுகிறது. பாரம்பரியமான பரீட்சை முறைகள் தொடர்பான எதிர்மறையான விமர்சனங்களை ஒருபுறம் வைத்துவிட்டாலும், எந்தவொரு கல்வி நடவடிக்கையும் மாணவர்களினை மையப்படுத்தியதாக அமைய வேண்டும் என்ற நவீன கல்விச் சிந்தனையினடிப்படையில், சாதாரணதரப் பரீட்சையும் மாணவர்களின் நலனை முதன்மைப்படுத்தியதாக அமைய வேண்டும். ஆனால், இன்று இப்பரீட்சையானது பாடசாலைகளின் கௌரவத்தினையும் கீர்த்தியையும் பறைசாற்றுவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இதன் காரணமாக சில பாடசாலைகளாலும் ஆசிரியர்களாலும் மேற்கொள்ளப்படும் நேர்மையற்ற அறம் துறந்த நடவடிக்கைகள், பாடசாலைகளுக்குள்ளேயே சமூகப் படிநிலைகளை உருவாக்கி, ஒருசில பாடசாலைகளை விளிம்புநிலைக்குத் தள்ளி தீண்டத்தகாதவர்களின் பாடசாலைகளாக மாற்றியுள்ளன.
பாரபட்சமற்ற முறையில் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில், எமது நாட்டின் கல்விச் சிந்தனையாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி எனும் வரப்பிரசாதத்தினை வலுக் குன்றச்செய்யும் பாதகச் செயலாகவே இதனை நோக்க வேண்டும். 'உட்படுத்தல் கல்வி' எனும் உயரிய சிந்தனை வலுப்பெற்றுவரும் இக்காலத்தில் இப்படியொரு பாரபட்சம் நிகழ்வது பிற்போக்கானதுமாகும்கூட. ஒரு பாடசாலையினைத் தரமான பாடசாலையாக உருவாக்குவதற்காகவும், அரசின் உதவிகளுக்கு அப்பால், அப்பாடசாலைக்கான பௌதீக வளங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் தேவையான காத்திரமான முன்னெடுப்புக்களை குறித்த பாடசாலையின் பணிக்குழுவினரும் பாடசாலை சமூகமும் மேற்கொள்வது வரவேற்கத்தக்க விடயம். ஆனால், அது நேர்மையற்றதாகவும் கல்வியில் நுட்பமான வர்க்க வேறுபாடுகளை உருவாக்குவதாகவும் அமைந்தால், வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும். எந்தவொரு அறம்சாராத நடவடிக்கையையும் மனதளவிலாவது வெறுக்க வேண்டும் என்பது எமது சமயம் எமக்குக் கற்றுத் தந்த பாடமாகும்.
சமநிலையான கல்விச் சூழலொன்றை கட்டியெழுப்ப வேண்டியதும் ஒரு பிள்ளை, தனது குடும்பத்தின் சமூக-பொருளாதார அந்தஸ்துகளில் தங்கியிராத வகையில், தரமான கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியதும் சமூகப் பொறுப்பாகும். 'இலவசக் கல்வி' எனும் எமது நாட்டின் போற்றத்தக்க அடையாளத்துக்கு மாற்றமாக, கல்விக் கூடங்களை வணிக சந்தைகளாக மாற்றிவிடுவதானது மிகப்பெரும் சமூகத் துரோகமாகும். அல்லாஹ்வே அனைத்திற்கும் தீர்ப்பாளன், அவனே அனைத்தையும் அறிந்தவன். இன்று கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக