மனித வள விருத்தியும் தனிமனித முயற்சியும்
(2013-09-05 அன்று காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் மன்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட உரை)
இந்தப் பிரபஞ்சப் பெருவெளியிலுள்ள இறைவனின் படைப்புக்களில் உன்னதமான படைப்பாக மனிதன் உள்ளான். உலகிலுள்ள வளங்களிலெல்லாம் மனித வளமே சிறந்ததாகக் கருதப்படுகிறது. மிகக் குறைவான பௌதீக வளத்தைக் கொண்ட நாடுகள்கூட மனிதவளத்தை வினைத்திறனாகக் கையாண்டு உச்சக்கட்ட வளர்ச்சியைக் கண்டுள்ளமையை வரலாறு நிருபித்துள்ளது.
இதனாலேயே இஸ்லாமிய மார்க்கமும் மனிதவள விருத்தியில் அதிக கரிசனை கொள்கிறது. தனிமனித அபிவிருத்தி தொடர்பான அதிகமான பொறுப்புக்களைச் சுமத்துகின்ற ஒரேயொரு மார்க்கமாகவும் அது திகழ்கின்றது. உலகிலுள்ள வளங்கள் அனைத்தும் மனிதனின் நலனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் குறிப்;பிடுகிறது.
ஓவ்வொரு தனிமனிதன் தொடர்பாகவும் இறைவனின் கண்காணிப்பு தொழிற்படுவதாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
'அவன் அவர்களைக் கணக்கிட்டு வைத்துள்ளான். மறுமையில் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவன் திருமுன் வருவர்.'
எனவேதான், 'இந்த உலகிலே இறைவனின் சட்டங்களை இயக்கமுள்ளதாக்கி அவனது திருப்தியைப் பெறுதல்' எனும் உயர் இலக்கை நோக்கிய பயணத்தை மேற்கொள்வதற்காக, ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டியவனாகவும் அது தொடர்பாக மறுமையில் கேள்வி கேடகப்படக்கூடியவனாகவும் இருக்கிறான்.
இந்த அடிப்படையில்தான், நாம் ஒவ்வொருவரும் சிறு வயதிலிருந்தே, ஒழுக்கப் பண்பாடுகளிலும் அறிவு, ஆற்றல் என்பவற்றிலும் எம்மை வளர்த்துக்கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். அறிவு, ஆற்றல் மற்றும் ஒழுக்கரீதியான மாற்றங்கள் எம்மில் ஏற்படவேண்டுமாயின் அதற்கான முயற்சியையும் நாமே மேற்கொள்ளவேண்டும். திருமறை அல்குர்ஆன் பின்வரும் கருத்தினை ஆணித்தரமாக முன்வைக்கிறது.
'எந்த சமூகமும் தன்னை மாற்றிக்கொள்ளாதவரை அல்லாஹ்வும் அதன் நிலையை மாற்றுவதில்லை.'
எனவேதான், எமது ஒழுக்கப் பண்பாடுகளை நெறிப்படுத்திக்கொள்வதோடு எமது அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளக்கூடிய எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு