ஞாயிறு, 26 அக்டோபர், 2014

புதுவருட சிந்தனை - வாழ்க்கையும் வருடங்களும் 

(தனித்துவ அடையாளங்களைப் பாதுகாத்தல்)

வாழ்க்கை, காலம் எனும் பாதையின் மேல் நகர்ந்து செல்கிறது. இதனால்தான் வாழ்க்கை 'பயணம்' எனும் வர்ணனையைச் சுமந்து கொள்கிறது. அது இறுக்கமான ஒற்றையடிப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணம். எங்களால் திரும்பிப் பார்க்க மட்டுமே முடியும், திரும்பி நடக்க முடியாது. முடிவு தெரியாத தனித்தனிப் பாதைகளில் ஒவ்வொருவராகப் பயணிக்கிறோம். அறிவியலின் அடிப்படையில் காலம், வெளி எனும் இரு விடயங்களும்தான் பிரபஞ்சத்தின் அடிப்படை அம்சங்களாகும். வெளி முப்பரிமாணம் கொண்டது. காலம் ஒரு பரிமாணம் கொண்டது. காலத்தைப் பயன்படுத்தும் நோக்கில் அதனைப் பகுத்து வைத்திருக்கிறோம். ஒழுங்காக நடைபெறும் நிகழ்ச்சிகளே காலத்தை அளவிடப் பயன்படுகின்றன. ஓர் அணுவினுள் நடைபெறும் அதிர்வுகள் தொடக்கம் சூரியன் மற்றும் வெள்ளுடுத் தொகுதிகளில் நடைபெறும் அசைவுகள் வரை இந்த நிகழ்ச்சிகள் வேறுபடும். பிளாங்க் நேர அலகு தொடக்கம்  ஆண்டு, நூற்றாண்டு வரை இதன் அலகுகளும் வேறுபடும்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நூல் அறிமுகம்:- 'இஸ்லாம் வழிகாட்டி'-தரம் 10, 11க்கான வினா-விடை'

'இஸ்லாம் வழிகாட்டி – கரம் 10, 11 க்கான வினா விடை' எனும் நூல் க.பொ.த (சாதாரண தரம்) பரீட்சையில் இஸ்லாம் பாடத்துக்குத் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி தயாரிக்கப்பட்டதாகும். காங்கேயனோடை அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் இஸ்லாம் பாட ஆசியராகப் பணிபுரியும் மௌலவி ஏ.ஜே.முஹம்மது அஸ்ரப் (பலாஹி) அவர்களால் எழுதப்பட்டுள்ள இந்நூலானது க.பொ.த சாதாரண தர இஸ்லாம் பாடத் திட்டத்தை முழுமையாகத் தழுவியதாகும். அகீதா (கொள்கை), இபாதத் (வணக்க வழிபாடுகள்), அஹ்லாக் (நற்பண்புகள்), முஆமலாத் (கொடுக்கல்-வாங்கல்), மஸாதிரு ஷரிஆ-ஜினாயாத் (சட்ட மூலாதாரம்,குற்றவியல்), முனாகஹாத் (குடும்;ப வாழ்வு), அத்தாரிகுல் இஸ்லாமியா (இஸ்லாமிய வரலாறு), மபாஹிமுல் இஸ்லாமிய்யா ஆகிய தலைப்புக்களில் தரம்-10இலும் 11இலும் உள்ள விடயங்கள் வினா-விடை ஒழுங்கில் தலைப்பு வாரியாக தொகுக்கப்பட்டுள்ளன.

புதன், 1 அக்டோபர், 2014

சிறுவர் உரிமைகள்-ஓர் ஆன்மீக, சமூக நோக்கு

அருள் நிறைந்த புனித பூமி. பாதையில் அமைதியாக நடந்து செல்கின்றனர் முஹம்மத் அபூ தாஹிர், நதீம் நவ்வாராஹ் ஆகிய இரு பலஸ்தீனச் சிறுவர்கள். ஆனால் இனவெறி மிக்க இஸ்ரேலிய படையின் ஆயுதங்கள் அவர்களைச் சிதைத்துவிடுகின்றன. இந்த ஆண்டில் நடைபெற்ற கொடூரங்களில் இதுவும் ஒன்று. இவ்வாறு ஆயிரக் கணக்கான சிறுவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகார வெறியின் அகோரப் பசிக்கு ஆளாக வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது.
வேண்டுமென்றே திணிக்கப்படுகிற யுத்தங்களால், தாம் ஏன் கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலேயே கொல்லப்படுகிற ஆயிரக் கணக்கான பலஸ்தீன, ஈராக்கிய, சிரிய நாட்டு சிறார்களுக்கு நீதி வழங்குவதில் உலகம் தவறியிருக்கிறது என்பதே உண்மையாகும்.