சிறுவர் உரிமைகள்-ஓர் ஆன்மீக, சமூக நோக்கு
அருள் நிறைந்த புனித பூமி. பாதையில் அமைதியாக நடந்து செல்கின்றனர் முஹம்மத் அபூ தாஹிர், நதீம் நவ்வாராஹ் ஆகிய இரு பலஸ்தீனச் சிறுவர்கள். ஆனால் இனவெறி மிக்க இஸ்ரேலிய படையின் ஆயுதங்கள் அவர்களைச் சிதைத்துவிடுகின்றன. இந்த ஆண்டில் நடைபெற்ற கொடூரங்களில் இதுவும் ஒன்று. இவ்வாறு ஆயிரக் கணக்கான சிறுவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகார வெறியின் அகோரப் பசிக்கு ஆளாக வேண்டிய நிலை இன்னும் தொடர்கிறது.
வேண்டுமென்றே திணிக்கப்படுகிற யுத்தங்களால், தாம் ஏன் கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலேயே கொல்லப்படுகிற ஆயிரக் கணக்கான பலஸ்தீன, ஈராக்கிய, சிரிய நாட்டு சிறார்களுக்கு நீதி வழங்குவதில் உலகம் தவறியிருக்கிறது என்பதே உண்மையாகும்.
வேண்டுமென்றே திணிக்கப்படுகிற யுத்தங்களால், தாம் ஏன் கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமலேயே கொல்லப்படுகிற ஆயிரக் கணக்கான பலஸ்தீன, ஈராக்கிய, சிரிய நாட்டு சிறார்களுக்கு நீதி வழங்குவதில் உலகம் தவறியிருக்கிறது என்பதே உண்மையாகும்.
இவர்கள் ஒரு புறமிருக்க சுயநலம் மிக்க உலக நிர்வாகப் பொறிமுறையின் தாக்கத்தினால் உருவாகும் வறுமை, அறியாமை, பஞ்சம், நோய் போன்ற கொடுமையான சோதனைகளுக்குள் சிக்கி உயிரை விடும் ஆபிரிக்க நாட்டு சிறுவர்கள் மறுபுறம். இவர்களோடு அன்றைய அரேபியாவில் மட்டுமன்றி நவீன கால இந்தியாவிலும் கூட பால்ரீதியான பாகுபாடு காரணமாக கொலை செய்யப்படும் பெண் சிசுக்கள், சமூகத்தில் நடமாடும் நெறிபிறழ்ந்த மனித மிருகங்களால் வேட்டையாடப்படும் சிறார்கள் என இப்பட்டியலானது நீண்டு செல்கிறது.
இவ்வாறு எந்தப் பாவங்களும் இல்லாமல், என்ன காரணத்துக்காக கொல்லப்படுகிறோம் என்பதை அறியாமல் மடிந்துபோகும் சிறுவர்கள் தொடர்பில் அல்-குர்ஆன் பின்வருமாறு குரலெழுப்புகிறது.
'என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமி விசாரிக்கப்படும்போது....' (அல்குர்ஆன் 81:8-9)
பதினெட்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் அனைவரும் சிறுவர்களென ஜக்கிய நாடுகள் சிறுவர் சமவாயம் குறிப்பிடப்படுகின்றது. உலகில் வாழ்கின்ற மக்களில் 1ஃ3 பங்கினர் சிறுவர்களாவர். சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு சட்ட ஏற்பாடுகளை உலகம் செய்து வைத்துள்ளது. ஐ.நா. சபையினால் 1948ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தினை அடியாகக் கொண்டு, சிறுவர்கள் மனிதப் பிறவிகள் எனும் அடிப்படையில், 1959ம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்டது.
சிறுவர்களின் உரிமைகள் தொடர்பில் 1989ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம், சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச ரீதியான சட்ட ஆவணமாக மதிக்கப்படுகிறது. 1979 ம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. 1989ம் ஆண்டு முதல் ஓக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதே தொடரில்தான் சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்குடனும் சிறுவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையிலும் 2008 ஜுன் மாதம் 12ம் திகதி சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் அனுஷ;டிக்கப்பட்டது. 'நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்' இலங்கையில் சிறுவர் உரிமை மீறல்கள் தொடர்பாக அவதானத்துடன் செயற்பட்டு வருகிறது.
இவ்வாறு ஒவ்வொரு நாட்டிலும் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியிலும் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பரந்தளவிலான விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இன்றுவரை மில்லியன் கணக்கான சிறுவர்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும். இந்த நிலையில் சிறுவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக தெய்வீக வழிகாட்டலின் கீழ் தெளிவு பெறுவது முக்கியமானதாகும்.
உண்மையில் சர்வதேச சட்டங்கள் ஒரு குழந்தையின் பிறப்பிலிருந்து அதன் உரிமைகள் தொடர்பாகப் பேசுகின்ற அதேவேளை இறைவனின் சட்டமானது பிறப்புக்கு முன்னாலிருந்தே, ஒரு குழந்தையின் பாதுகாப்பானதும் பண்பாடானதுமான வளர்ச்சிக்கு சாத்தியப்பாடுடைய ஒரு குடும்பத்தை நிறுவுவதிலிருந்து, சிறுவர் உரிமைகள் தொடர்பாகப் பேசுகிறது என்பதைக் கவனத்திற் கொள்வது பொருத்தமானதாகும். திருமணம், சிறப்பான குடும்ப உறவு, பெற்றோர்களாக மாறப்போகும் தம்பதியரிடையேயான கொள்கை ரீதியான உடன்பாடு என்பன தொடர்பாக அதிகம் வலியுறுத்தப்படுகிறது.
வாழ்வுரிமை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் தலையாய உரிமையாகும். அது சிறுவர்களுக்கும் உரியதாகும். 'ஒரு பிள்ளையின் உயிர் வாழும் உரிமை பிறப்புடன்கூடியது என்பதை அனைவரும் ஏற்றுக்ககௌ;ள வேண்டும்' என ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் சமவாயத்தில் உறுப்புரை 6ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நோக்கினை அடிப்படையாகக் கொண்ட கருக் கலைப்பினைக் கூட இஸ்லாம் சிசுக் கொலையாகக் கருதுகிறது.
'நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளை) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்' (அல்குர்ஆன் 17:31).
அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ;டம் அடைந்தனர்;, வழி கெட்டனர், நேர் வழி பெறவில்லை.
-அல்குர்ஆன் (6 : 140)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் அக்காலப் பெண்கள் செய்துகொள்ள வேண்டிய 'பைஅத்' எனப்படும் சத்தியப் பிரமாணத்தின் ஒரு பகுதியாக சிசுக் கொலை பற்றிய உறுதிமொழியும் அமைய வேண்டும் என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது.
நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து 'அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விடயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்' என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
-அல்குர்ஆன் (60 : 12)
ஒரு மனிதன் வாழ்வில் அவனது அடையாளம் பிரதான இடம் வகிப்பதாகும். தனிப்பட்ட அடையாளத்துடன் குடும்ப, சமூக அடையாளங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஐ.நா. சிறுவர் சமவாயம் உறுப்புரைகள் 6-7 பின்வருமாறு அமைகிறது: 'ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததும் ஒருபெயரைப் பெறும் உரிமையுடையதாகும். அத்துடன் ஒரு நாட்டினத்தைச் சார்வதற்கும், தன் பெற்றோர் இன்னாரென்று அறிவதற்கும், அவர்களால் பராமரிக்கப்படுவதற்கும் அது உரிமையுடையதாகும். குழந்தையின் தனித்துவ அடையாளத்தைப் பேணுவதும், அவசியம் ஏற்பட்டால் அதன் அடிப்படை அம்சங்களை மீள நிலைநாட்டுவதும் அரசின் கடமையாகும். இதில் குழந்தையின் பெயர், இனம், குடும்ப சொந்தங்கள் என்பன அடங்கும்.
பெயரொன்றைப் பெறுவது பிள்ளையின் உரிமை எனும் விடயத்துக்கு மேலதிகமாக அப்பெயரானது அழகான கருத்துள்ள பெயராக அமைய வேண்டியதன் அவசியத்தையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. நபிமார்களின் பெயர்களைச் சூட்டுங்கள். உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது 'அப்துல்லாஹ்', 'அப்துர்ரஹ்மான்' என்பனவாகும். ஹாரிஸ் – உழைப்பாளி, ஹம்மாம் –முயற்சிப்பவன் என்பன மிகவும் உண்மையானவையாகும். ஹர்ப்-போர், முர்ரா-கசப்பு என்பன மிகவும் வெறுக்கத்தக்கவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் பெற்றோரை இனங்காணுதல் மற்றும் குடும்ப அடையாளம் என்பனவும் வலியுறுத்தப்படுகின்றன. வளர்ப்புப் பிள்ளைகள் தொடர்பாக அல்-குர்ஆன் பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகிறது.
'அவர்களை அவர்களது தந்தையரின் பெயர்களுடன் சேர்த்து அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடத்தில் மிக நேர்மையானதாகும்.'
-அல்குர்ஆன் (33:5)
இன்னும் சமூக, கலாச்சார அடையாளங்களைப் பேணுதல், அவற்றைப் பின்பற்றுதல் என்பனவும் முக்கியமானவையாகும். ஐ.நா. சிறுவர் சமவாயம் உறுப்புரை-30ல் 'தமது சொந்தக் கலாசாரத்தை அனுபவிக்கவும் தமது சொந்த மதம், மொழி ஆகியவற்றைப் பயிலவும் சிறுபான்மை இனத்தவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உண்டு.' எனக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த உரிமை பிரதானமாக முஸ்லிம் சிறுமியர்களைப் பொறுத்தவரை மறுக்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தமக்கு சமயக் கடமையாக ஆக்கப்பட்டுள்ள 'ஹிஜாப்' எனப்படும் தம் கலாச்சாரம் சார்ந்த ஆடையுடன் கல்வி பெறுவதிலிருந்து அவர்கள் பலவந்தமாகத் தடுக்கப்படும் நிலை காணப்படுகிறது.
'எல்லா உரிமைகளும் வயது, பால், ஆற்றல், நிறம், இனம், மொழி அல்லது சமயம் என்பன எவ்வாறிருப்பினும் எல்லாச் சிறுவர் சிறுமியருக்கும் உரியன. சிறுவர்களை எல்லா வகையான பாகுபாடுகளிலிருந்து காப்பதும் அவர்களின் உரிமைகளைப் பரப்ப ஆக்க பூர்வமான நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகும்.' ஏன்பது ஐ.நா. சிறுவர் சமவாயத்தின் இரண்டாம் உறுப்புரையாகும். 'அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! உங்கள் குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடந்துகொள்ளுங்கள்!' என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தனது சொந்தக் குழந்தைகளுக்கிடையில் பால் ரீதியான அல்லது வேறு எவ்வகையான பாரபட்சமும். காட்டுவது கூடாது என்பது இங்கு வலியுறுத்தப்படும் விடயமாகும்.
உஸாமா(றழி) அவர்கள் கூறுகின்றார்கள்;: நபி(ஸல்) அவர்கள் என்னைத் தூக்கி அவர்களது ஒரு தொடை மீதும், நபி(ஸல்) அவர்களது பேரன் ஹஸன்(ரழி) அவர்களைத் தூக்கி ஒரு மடியிலும் அமர்த்தி, பின்னர் எம்மிருவரையும் அணைத்துக் கொண்டு 'யா அல்லாஹ்! இவ்விருவர் மீதும் நீ கருணை காட்டுவாயாக! நானும் இவ்விருவர் மீதும் அன்பு காட்டுகின்றேன்' எனப் பிரார்த்தித்தார்கள்.
உஸாமா (றழி) நபியவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த அடிமையின் புதல்வர். ஆனால் ஹஸன்(றழி) உயர் குலத்தைச் சேர்ந்த நபியவர்களின் சொந்த மகளான பாத்திமாவின் புதல்வர். நபியர்கள் அவ்விரு குழந்தைகளுக்குமிடையில் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை என்பதை இங்கு அவதானிக்க முடிகிறது. பொதுவாகவே அனைத்துக் குழந்தைகளும் பிறப்பால் பாரபட்சமற்றவர்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும். 'அனைத்துக் குழந்தைகளும் இயற்கை மார்க்கத்திலேயே பிறக்கின்றன. அந்தக் குழந்தையின் பெற்றோர்களே அதனை யூதனாகவோ நஸாராவாகவோ மஜூஸியாகவோ மாற்றுகின்றனர்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு பிள்ளைக்கு கல்வியும் ஒழுக்க விழுமியங்களுக்கு இசைவான வழிகாட்டலும் வழங்குவது பெற்றோர் மற்றும் குடும்பத்தின் பொறுப்பாகும். 'ஒரு தந்தை தன் குழந்தைக்கு ஒழுக்க விழுமியங்களையும் கல்வியையும் விட மிகச் சிறந்த செல்வத்தை வழங்க முடியாது' என்பது நபியவர்களின் கூற்றாகும். பிள்ளைகளுக்கு ஒழுக்க விழுமியங்களையும் சமூக நடத்தைகளையும் எவ்வாறு கற்பிக்க முடியும் என்பதற்கான மிகச் சிறந்த வழிகாட்டலை நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள முடிகிறது.
நபி(ஸல்) அவர்களுடன் ஒரு சிறுவனும் உணவருந்துகிறான். அந்தச் சிறுவனது கைகள் உணவு தட்டில் அங்குமிங்கும் உலவுகின்றன. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'மகனே! 'பிஸ்மில்லாஹ்' கூறுங்கள்! உங்களது வலது கையால் உண்ணுங்கள்! உங்களுக்கு முன்னால் இருப்பதை எடுத்து உண்ணுங்கள்!' என்று கூறினார்கள்.
சிறுவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிப்பதில் மென்மையான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை சிறுவர்களுடனான உறவில்கூட ஜனநாயகத் தன்மை, நேர்மை என்பன பேணப்பட வேண்டும் என்பதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டம் என்பதும் வெளிப்படையானது.
ஒரு சபையில் நபி(ஸல்) அவர்களுக்குப் பால் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி விட்டு நபி(ஸல்) அவர்கள் வலது பக்கம் பார்த்தார்கள். அங்கே இப்னு அப்பாஸ் எனும் சிறுவர் இருந்தார். இடது பக்கம் அபூபக்கர்(ரழி) போன்ற பெரியவர்கள் இருந்தார்கள். அப்போது பால் கிண்ணத்தைப் பெரியவர்களுக்குக் கொடுக்க விரும்பிய நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களிடம் 'பெரியவர்களுக்குக் கொடுப்பதற்கு எனக்கு அனுமதியளிப்பாயா!' எனக் கேட்டார்கள். அவர் மறுத்த போது கிண்ணத்தை அவரது கையிலேயே கொடுத்தார்கள்.
வலது பக்கத்தில் இருப்பவருக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியப் பாரம்பரியமாகும். இங்கு ஒரு சிறுவருக்கு இருக்கும் ஜனநாயக ரீதியான உரிமைக்கு நபி (ஸல்) அவர்கள் மதிப்பளித்திருக்கிறார்கள். இன்னும் பொறுப்புணர்வுள்ளவர்களாகவும் துணிச்சலுள்ளவர்களாகவும் கொள்கை உறுதி கொண்டோராகவும் சிறுவர்களைப் பயிற்றுவித்தலிலும் நபியவர்கள் கரிசனை காட்டினார்கள்.
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பயணித்தார்கள். அப்போது, 'சிறுவனே! நான் உனக்குச் சில வார்த்தைகளைக் கற்றுத் தருகின்றேன். நீ அவற்றைப் பேணிக்கொள்! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். நீ அவற்றைப் பேணிக்கொள்! அவனை உன் முன்னால் காண்பாய். நீ பிரார்த்தித்தால் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும். நீ பாதுகாவல் தேடினால் அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பாதுகாவல் தேட வேண்டும். அறிந்துகொள்! மனித சமூகம் ஒன்றுசேர்ந்து உனக்கு உதவ முற்பட்டாலும் அல்லாஹ் உனக்கு எழுதியதைத் தவிர அதிகமாக எந்த உதவியையும் செய்திட முடியாது. அவ்வாறு மனித சமூகம் உனக்குத் தீங்கு செய்ய எண்ணி விளைந்தாலும் உனக்கென அல்லாஹ் விதித்ததைத் தவிர அதிகமாக எந்தத் தீங்கையும் அவர்களால் செய்து விட முடியாது. பேனைகள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனாதாரவாக விடப்படும் ஆனாதைச் சிறுவர்களின் நலனிலும் அக்கறை செலுத்தும் இஸ்லாம் வலியுறுத்துகிறது அவ்வாறான சிறுவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு ஆர்வமூட்டுகிறது.
'அநாதைகள் பருவ வயதை அடையும்வரை அவர்களைப் பராமரியுங்கள். அவர்களிடம் சுயமாய் செயற்படும் முதிர்ச்சியை அவதானித்தால், அவர்களது சொத்துக்களை அவர்களிடமே ஒப்படைந்து விடுங்கள்'
-அல்குர்ஆன் (4:06)ளுமாறு தூண்டுகிறது.
சிறுவர்கள் பலவீனர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு வழங்கப்படுதல் இன்றியமையாதது. மேலும் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் அத்தியாவசியமானது. சில பொருளாதாரக் காரணிகளால் இநத உரிமையைக் கூட இன்று சிறுவர்கள் இழந்துவிடும் நிலை தோன்றுகிறது. குடும்ப அங்கத்தவர்களுடனான உறவு, சமூக உறவு போன்றனவும் சிறுவர்களின் ஆளுமை விருத்தியில் முக்கிய பங்காற்றும்.
சிறுவர்கள் அனைவரும் கல்வியைப் பெறும் உரித்துடையவர்கள். சிறுவர்களுக்கு வழங்கப்படும் கல்வி சமனிலை ஆளுமை கொண்ட சிந்தனை ஆற்றல் மிக்க பிரஜைகளாக அவர்களை உருவாக்குவதில் துணை நிற்க வேண்டும். மாறாக கல்வியை சுமையாக எண்ணி சோர்வடைகிற நிலை சிறுவர் மத்தியில் தோன்றும்போது, கல்வியின் உண்மையான இலக்குகளை அடைய முடியாமற் போகும். விளையாட்டு, ஓய்வு என்பனவும் சிறுவர்களின் உள ஆரோக்கியத்துக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் அவசியமானவையாகும்.
ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் இயந்திரத் தனமாக இருக்கும்போது அவை மனப்பூர்வமாகப் பின்பற்றப்படுவதில்லை. ஓரளவு வளர்ந்த சிறுவர்களிடம் சில பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படும்போது, அந்தப் பொறுப்புக்களை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும். பாடசாலைகள் இதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. வெளிப்படையான கலந்துரையாடல் மூலம் சிறுவர்களின் கருத்துக்கள், அவர்களது பிரச்சினைகள் போன்றவற்றை அறிந்துகொள்ள முடியும். அதிகாரத்துடன் கட்டளையிடுகின்ற ஜனநாயகப் பண்பற்ற சூழல் பண்பாடான சமூகத்தை உருவாக்கத் துணை செய்வதில்லை.
சிறுவர்களுக்கு இருக்கும் சட்டபூர்வமான உரிமைகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதிக்கின்ற சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். ஆசிரியர்களும் பெற்றோரும் சமூகமும் அதற்காக உழைக்க வேண்டும். சிறுவர்கள் மத்தியில் மேலெழும் ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு பல்வேறு சமூகக் கருவிகளுடன் தவறான மனப்பாங்குகள் மற்றும் அணுகுமுறைகளும் காரணிகளாகின்றன.
pdf வடிவில் இக்கட்டுரையினை பதிவிறக்கம் (Download) செய்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக