புதுவருட சிந்தனை - வாழ்க்கையும் வருடங்களும்
(தனித்துவ அடையாளங்களைப் பாதுகாத்தல்)
வாழ்க்கை, காலம் எனும் பாதையின் மேல் நகர்ந்து செல்கிறது. இதனால்தான் வாழ்க்கை 'பயணம்' எனும் வர்ணனையைச் சுமந்து கொள்கிறது. அது இறுக்கமான ஒற்றையடிப் பாதையில் மேற்கொள்ளப்படும் பயணம். எங்களால் திரும்பிப் பார்க்க மட்டுமே முடியும், திரும்பி நடக்க முடியாது. முடிவு தெரியாத தனித்தனிப் பாதைகளில் ஒவ்வொருவராகப் பயணிக்கிறோம். அறிவியலின் அடிப்படையில் காலம், வெளி எனும் இரு விடயங்களும்தான் பிரபஞ்சத்தின் அடிப்படை அம்சங்களாகும். வெளி முப்பரிமாணம் கொண்டது. காலம் ஒரு பரிமாணம் கொண்டது. காலத்தைப் பயன்படுத்தும் நோக்கில் அதனைப் பகுத்து வைத்திருக்கிறோம். ஒழுங்காக நடைபெறும் நிகழ்ச்சிகளே காலத்தை அளவிடப் பயன்படுகின்றன. ஓர் அணுவினுள் நடைபெறும் அதிர்வுகள் தொடக்கம் சூரியன் மற்றும் வெள்ளுடுத் தொகுதிகளில் நடைபெறும் அசைவுகள் வரை இந்த நிகழ்ச்சிகள் வேறுபடும். பிளாங்க் நேர அலகு தொடக்கம் ஆண்டு, நூற்றாண்டு வரை இதன் அலகுகளும் வேறுபடும்.
மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே நாட்காட்டிகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. கலாச்சாரங்களின் பின்னணியில் அவை மாறுபட்டனவாய் இருந்துள்ளன. மனித நாகரீக விருத்தியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த, 'காலத்தை அளந்து திட்டமிட்டுப் பயன்படுத்தல்' என்ற உயர் நிலைச் சிந்தனையின் வெளிப்பாடாய் இவை தோற்றம் பெற்றிருக்கின்றன.
இந்த வரலாற்று யதார்த்தத்தின் ஓர் அங்கமாக ஹிஜ்ரா நாட்காட்டியும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. நபி (ஸல்) அவர்களின் மதீனா நகருக்கான குடிபெயர்வு ஹிஜ்ரா என அழைக்கப்படுகிறது. இது கொள்கையைப் பாதுகாப்பதற்கானதோர் பயணமாகும். தனியொருவரின் பிறப்பு அல்லது இறப்பு போன்ற வழக்கமாக நிகழ்வுகளுக்கு அப்பால், உன்னதமான வரலாற்றுப் புள்ளியில் இருந்து இஸ்லாமிய ஆண்டுக் கணிப்பு ஆரம்பமாகிறது.
ஹிஜ்ரா நாட்காட்டி இஸ்லாமிய சமூகத்தின் வாழ்வியல் அடையாளங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஹிஜ்ரா நாட்காட்டி ஓரு சந்திர நாட்காட்டியாகும். மனித வரலாற்றில் முதன்முதலில் தோன்றிய நாட்காட்டி சந்திர நாட்காட்டியாகும். எனவே, அது இயற்கையானதாகும்.
ஜரோப்பிய காலணித்துவ செல்வாக்கில் பல்வேறு கலாச்சாரங்களின் நாட்காட்டிகளும் அனாதைகளாகிப் போனது போன்று ஹிஜ்ரா நாட்காட்டியும் செல்வாக்கிழந்து போனது. சமய அனுஷ;டானங்களைத் தீர்மானிப்பதற்கு மட்டும் உரித்தான ஓர் நாட்காட்டியாக அதன் பயன்பாடு எல்லைப்படுத்தப்பட்டது. இவ்வாறு 'புதிய உலக ஒழுங்கு' என்ற பெயரில் தனியொரு சமூகத்தின் பண்பாடுகளால் பல்வேறு சமூகங்களின் தனித்துவ அடையாளங்கள் துடைத்தெறியப்படும் அவலம் பற்றி பெரும்பான்மையானோர் கவலைப்படுவதில்லை
இந்த நொடியில்தான் முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்கள் எவை என்ற கேள்வி எழுகிறது. பிற்போக்கான பாரம்பரியப் பழக்கங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருக்கும் பிடிவாதப் போக்கிற்கும் நவீன அலை எழுச்சியில் முகங் குப்புற வீழ்ந்து கையிலிருக்கும் அடையாளங்களையும் தொலைத்து நிற்கும் பலவீனமான நிலைக்கும் மத்தியில் உண்மையான இஸ்லாமிய அடையாளங்ளை இனங்காண வேண்டியுள்ளது.
தனித்துவ அடையாளங்களைப் பற்றிய சரியான புரிதலற்ற சமூகமாக எம் சமூகம் மாறியிருப்பதை அவாதனிக்க முடிகிறது. சிலவேளை அது தனியொருவகை உடையாக அல்லது சில நடைமுறைப் பழக்கவழக்கங்களின் தொகுப்பாக அடையாளம் காணப்படும். இன்னும் ஒருபடி மேலாக தமது நகரங்களை அரேபிய பாணியில் அலங்கரித்தல், அவற்றின் இயல்பான பெயர்களை அரேபிய கோத்திரங்களின் பெயர்களாக மாற்றுதல் போன்றனவும் இஸ்லாமிய தனித்துவ அடையாளங்களாக நோக்கப்படும் ஆபத்தான நிலையும் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாத்துடன் தொடர்பற்றவை.
இந்த, இஸ்லாத்துடன் சம்பந்தமில்லாத, அரேபிய நாகரீகக் கொள்வனவானது மற்றுமொரு ஆபத்தையும் உள்ளடக்கி நிற்கிறது. புவியியல் ரீதியாக வேறுபட்டிருக்கும், முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் பல்வேறு தனித்துவ கலாச்சார அடையாளங்கள் மங்கிப் போகின்ற நிலையே அதுவாகும். யதார்த்த நிலையில் முஸ்லிம் சமூகம் கொள்கையிலும் அடிப்படைகளிலும் ஒருமித்து நிற்கின்ற உலகளாவிய சமூகமாகும். ஆனால், புவியியல் வேறுபாடுகளின் அடிப்படையில் பல்வேறுபட்ட பழக்க வழக்கங்களையும் கலைகளையும் உள்ளடக்கிய பல்லினத்துவ அழகு கொண்ட சமூகமாகும். சில வேளை பிரதேச ரீதியான அரசியல் ஒழுங்குகள் கூட இந்த அடிப்படையின் கீழ் மீள் பரிசீலனை செய்யப்படும்.
இஸ்லாம் இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கும் அதே வேளை, இறைவனின் அற்புதமான படைப்பொழுங்காகவும் நோக்குகிறது. இறை வேதமான அல்குர்ஆனின் பின்வரும் கூற்றும் இதனை உறுதிப்படுத்துகிறது.
'மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்-குர்ஆன் 49:13)
ஒரு முஸ்லிமின் அடிப்படை தனித்துவ அடையாளம் அவனது கொள்கையாகும். இது உலகளாவிய பொதுமைப்பாட்டைக் கொண்ட விடயமாகும். இறையச்சமே ஒரு மனிதனின் உயர்வைத் தீர்மானிக்கும் காரணி என அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. இறையச்சத்தின் மீதுதான் ஒரு முஸ்லிமினின் வாழ்வியல் சார்ந்த ஒழுக்க நெறிகள் கட்டியெழுப்பப்பட வேண்டும்
'ஏகத்துவக் கொள்கை, கல்வி அபிவிருத்தி, கொள்கைக்கு சான்று பகர்தல், நல்லதை வளர்க்கவும் தீயதை ஒழிக்கவும் பங்களித்தல் எனும் நான்கு விடயங்களும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்களாகும்' என்பது நவீன இஸ்லாமிய சிந்தனையாளரான தாரிக் ரமழானின் கருத்தாகும்.
அல்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் உணர்த்தி நிற்கும் அடிப்படை ஒழுக்க நெறிகளே ஒரு முஸ்லிமின் தனித்துவ அடையாளங்களாகும். இந்த அடிப்படையே ஒரு சமூகத்தின் தனித்துவ அடையாளத்தையும் நிர்ணயிக்கிறது. கொள்கைப் பற்று, இறை திருப்தியை மட்டும் நாடுதல், நீதி, சமத்துவம், நேர்மை, நடுநிலை, பாரபட்சமின்மை, இங்கிதம், சகோதரத்துவம், மனித சமூகத்தின் நலனை நாடுதல், உரிமைகளை மதித்தல், சூழல் குறித்த விழிப்புணர்வு, நன்மையினை வளர்க்கப் பாடுபடல், தீமைகளை ஒழிக்க ஒத்துழைத்தல், கடின உழைப்பும் தியாகமும், கல்விப் பின்னணியைக் கொண்டிருத்தலும் கல்விக்காக உழைத்தலும் போன்ற விடயங்களே இஸ்லாமிய அடிப்படையில் ஒரு முஸ்லிம் சமூகம் கொண்டிருக்க வேண்டிய தனித்துவ அடையாளங்களாகும்.
இத்தகைய தனித்துவ அடையாளங்களைக் கொண்ட சமூக அமைப்பொன்றே ஹிஜ்ரா நிகழ்வினை அடுத்து நபி(ஸல்) அவர்களின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது. ஹிஜ்ராவினை ஞாபகப்படுத்தும் ஒவ்வொரு கணமும் இத்தகை அடையாளங்களைக் கொண்ட சமூகம் பற்றிய சிந்தனை மேலெழுவதும் அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக